Monday, July 27, 2009

"எல்லாப் புகழும்


"எல்லாப் புகழும்
இறைவனுக்கே"-
அல்லாவின் திருவடியில்
அத்தனைப் பாராட்டையும்
அர்ப்பணித்து
வெற்றி ஏணியின்
ஒவ்வொரு படியிலும்
ஏ.ஆர் ரஹ்மான்
தன் உள்ளிருந்து
உச்சரிப்பது.
உலகமே பார்த்திருக்க
இந்திய இதயங்கள்
இன்பத்தில் பூத்திருக்க
தமிழர் தலைகள்
பெருமிதத்தில்
நிமிர்ந்திருக்க
உச்சிப்படியில் நின்று
மறுபடி அதையவர்
உச்சரிக்கக் கேட்ட போது
அரங்கம் அதிர்ந்தது
கரகோஷத்தில்
அகிலம் அதிர்ந்தது
அவர் தந்த இசையில்..
ஜெய் ஹோ...!

தன்னம்பிக்கை இவரது
வெற்றியின் சூட்சமம்
தன்னடக்கமே இவரது
தாரக மந்திரம்-
ஈன்றெடுத்த
தாயின் பாதங்களில்
விருதினை சமர்ப்பித்து
தாய் மண்ணுக்கும்
ஈட்டித் தந்திருக்கிறார்
இத்தனை பெருமை-
ஆனந்த வெள்ளத்தில்
குதித்துக் கும்மாளமாய்
கூவுகிறார் ரசிகரெல்லாம்..
ஜெய் ஹோ...!

சூழ்கிறார் இவரைப் பேட்டிக்கு-
"எதுவும் முடியும்
எனும் எண்ணம்
இனி வரட்டும்
இளைஞர் ஒவ்வொருவருக்கும்"
சொல்கிறார் நற்செய்தி
வெல்கின்ற வழிகாட்டி-
சொல்லுங்கள் இளைஞர்களே
ஜெய் ஹோ..
வெல்லுங்கள் உலகை
ஜெய் ஹோ...!

செய்யும் தொழிலே
தெய்வம் என்று
நேர்த்தியை நாடி
விழித்தே இருந்த
இவரது இரவுகள்
யாவும் விடிந்தன
வெற்றியின் முகத்தில்
ஒவ்வொரு நாளும்-
வந்தன விருதுகள்
வாசலைத் தேடி..
ஜெய் ஹோ...!

வறுமை இவரை
வறுத்த போதும்
வருத்தம் விடுத்து
பொறுப்புகள் சுமந்தார்.
இளமையில் கல்வி
முழுமை அடைய
முடியாது போயினும்-
முயன்று கற்றார்
அல்லும் பகலும்-
முழுமையாய் இசையினை
மூத்தோர் பலரிடம்-
கூடவே கற்றார்
பணிவும் பண்பும்-
அயராத உழைப்பால்
அடைந்தார் வெற்றியும்-
ஜெய் ஹோ...!

பெற்றவர் இன்ன
துறையில் எனை
நுழைய விட்டிருந்தால்
தொட்டிருப்பேன் வானத்தை-
இன்னார் எனக்குவந்த
இவ்வாய்ப்பைத்
தட்டிப் பறிக்காதிருந்தால்
எட்டியிருப்பேன் இமயத்தை-
என்றெல்லாம்
போனவற்றைப் பேசிப்பேசிப்
பொழுதினைப் போக்காமல்
காரணத்தைத் தேடித்தேடி
கணங்களைக் வீணாக்காமல்
கற்றிடுங்கள் பாடமிவர்
பெற்றிருக்கும் வெற்றியில்
ஜெயிக்கப் பிறந்தவர்தாம்
நிச்சயமாய் நீங்களும்..
ஜெய் ஹோ...!

No comments:

Post a Comment