Friday, July 1, 2011


வெள்ளைக்கார துரைகளும், கங்காணி கறுப்புத் துரைகளும் எமது தோட்டத்துத் தாய்க்குலத்திற்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளை வகைதொகையின்றி செய்திருக்கிறார்கள். பெண் தொழிலாளர்கள் பல்வேறு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதைத் தோட்டப்புறத்தில் பாடப்பட்ட நாட்டுப்புற இலக்கியத்தில் காண முடிகிறது. வாழ்வுக்கே போராட்டமாக இருந்த நேரத்தில் மானத்தைக் காத்துக்கொள்ள போராடிய வேண்டிய இக்கட்டான நிலைமை தனக்கு ஏற்பட்டதை ஒரு பாடலில் இப்படி சொல்கிறாள் ஒருத்தி.

உள்ளத நான்சொல்ல வந்தேன் கேள்!
காலையிலே நாலு மணிக்குக் கேள்
கிழக்குமணி அடிக்கும்போது டிங்கு டிங்குதான்
நான் போகாவிட்டால் சோறுமில்லே!
ஐயய்யோ என்ன செய்வேன்?
பெரிய மம்முட்டி எடுத்துப் புறப்பட்டு நாபோனேன்
சுருக்கா வரலேன்னு ஐயா அடிசாரே!
அந்தக்கம்பு எடுத்தில்ல அடிசாரு கங்காணி
ஐயய்யோ அம்மா! அப்பா! அடுக்குமா?
யாருக்குத்தான் பதிசொல்வேன் துரைமாரே!
சாமக்கோழி கூவுது எழுப்பறான்;
சாமக்காரன் கூப்பிடறான்!
விறுவிறுன்னு தண்ணிபோடு எல்லம்மா!
இடுப்புத்துணி எங்கேடி வச்ச எல்லம்மா!
துறுதுறுன்னு பேசிக்கிட்டு துரை வர்றாரு!
குசுகுசுன்னு பேசிக்கிட்டு கிராணி வர்றாரு!
ஏட்டைப் புறட்டுறாரு எல்லம்மாவ கூப்பிடுறாரு
கடுகடுன்னு கூப்பிடுறாரு காத்தாயிய கூப்பிடுறாரு
விறுவிறுன்னு போறாரு வீரம்மாவ கூப்பிடுறாரு
ஏழாம் நம்பர் பள்ளத்தில் எள்ளுச்செடி தோட்டத்திலே
ஏஞ்சொல்லி வெட்டும்போது எல்லம்மாள
அந்த வெட்டு பார்க்கும் கங்காணி
விறுவிறுன்னு போயி தாவணியப் புடிச்சாரு
தங்கக் காப்பு என்று கையைப் புடிசாரு...

இப்படி இருந்த பால்மரக் காடுகளில் தாம் பட்ட இன்னல்களைத் தாங்க முடியாமல் உயிரையே மாய்த்துக்கொண்டவர்கள் பலர் உள்ளனர் என்ற உண்மையை கீழே வரும் பாடல் போட்டு உடைக்கிறது.

சாலையிலே ரெண்டு மரம்
சர்க்காரு வெச்ச மரம்
ஓங்கி வளர்ந்த மரம்
என் தங்க ரத்தினமே
அது எனக்குத் தூக்குமரம்

தோட்டத்து வாழ்க்கை தொல்லைகளைத் தாங்க முடியாமல் பலர் தாயகம் திரும்பியுள்ளனர். குறிப்பாக, இரப்பர் விலை சரிவு கண்ட காலத்தில் பல்லாயிரம்பேர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மீண்டும் எப்படியோ தென்னிந்தியாவுக்கே திரும்பி போய்விட்டனர். அப்படி போகும் போதும்கூட மண்ணை நேசிக்கும் மாண்புடைய எமது தமிழர் கனத்த இதயத்தோடுதான் போயிருக்கின்றனர். இதைபற்றி ஒரு பாடல் இப்படி கூறுகிறது.

போய் வாரேன் பால்மரமே
போய் வாரேன் பால்மரமே
பவுனுக்குப் பவுனு ரப்பர்
பாலு வித்த காலம் போச்சு
சீட்டுப்பால் ஒரு விலையும்
கோட்டுப்பால் ஒரு விலையும்
மங்குப்பால் ஒரு விலையும்
மண்ணுப்பால் ஒரு விலையும்
சிங்கம்போல விலையை விற்றார்
பங்கம்போல நிலைகுலைந்தார்
போய் வாரேன் பால்மரமே
போய் வாரேன் பால்மரமே

இத்தனை சிரமங்களுக்கு நடுவிலும் வேறு நாதியில்லாத காரணத்தால் தமிழ் மக்கள் தோட்டத்தையே நம்பி வாழ வேண்டிய சூழ்நிலையில் சிக்கிக்கொண்டனர். மேலும், தோட்டத்தில் மக்களுக்கு வேண்டிய சில அடிப்படைகளை வெள்ளைக்கார நிருவாகம் செய்து கொடுத்திருந்தது. குறிப்பாக, குடியிருக்க வீடு, குடிநீர், குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம், கூத்துமேடை, கள்ளுக்கடை, கோயில் என்று சில வசதிகளைச் செய்துகொடுத்து மக்களை ஆட்டு மந்தைகளாகத் இரப்பர் காடுகளிலேயே அடைத்து வைத்திருந்தனர்.

இரப்பர் மரங்கள் சூழ்ந்திருந்த திறந்தவெளிச் சிறைகளில் எமது மக்கள் வாழ்வதற்காக நாளும் போராட வேண்டியிருந்தது. தோட்ட நிருவாகத்தின் கொடுமைகள், கங்காணிகளின் அடவாடிகள், சாதிச் சண்டை, கள்ளச் சாராயம், தோட்டத் துண்டாடல், குறைவான ஊதியம், விலைவாசி ஏற்றம், தொழிற்சங்கப் போராட்டம், நாட்டு விடுதலைப் போராட்டம் எனப் பல்வேறு நெருக்கடிகளை அவர்கள் கடந்து வந்திருக்கின்றனர்

1950கள் வரையில் தோட்டப் புறங்களில் அல்லல்பட்ட எமது மக்களுக்கு விடுதலை ஒளி தென்பட தொடங்கியது. பிரிட்டிசாரிடமிருந்து மலாயாவுக்கு விடுதலை பெறுவதற்கான போராட்டங்கள் நாடுமுழுவது தீவிரமடைகின்றன. இந்தப் போராட்டத்தில் தோட்டத்து தொழிற்சங்கங்களும் எமது மக்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு பங்கெடுத்துக் கொள்கின்றனர். அதுபற்றி ஒரு பாடல் இவ்வாறு கூறுகிறது.

எங்கள் மலாயா தங்கிடும் இன்பம்
பொங்கிட வேண்டாவா?
இந்திய சீனம லேசியர் யுரேசியர்
என்றுமிந் நாட்டினிலே – ஒன்றாய்
நன்றுடன் வாழ்ந்திடுவோம்!
யாவரும் ஈண்டு மலாயர்கள் என்று
இணையற்ற தோரின மாகவே மாறிச்
சத்தியச் செந்நெறிப் பன்னூல் கொண்டு
சாந்தியும் பெற்றிடுவோம்
1957இல் மலாயா விடுதலை அடைந்தது. ஆனால் எமது மக்களின் நிலைமை மாறியதா? தோட்டப்புறத்தையே நம்பியிருந்த மனப்போக்கு மாறியதா? நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தோட்டக்காட்டு கும்மிருட்டில் வாழ்ந்தவர்களின் மனம் இன்னும் விடியாமலே இருந்தது என்பதுதான் உண்மை.

மரமிருக்கு உளியிருக்கு
மனமிருக்கு உழைப்பதற்கு
மற்றத் தொழில் நமக்கெதுக்கு வேலப்பா – இதுவே
உற்ற தொழில் இதுநமக்குப் போதுமப்பா

என்று எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையோ முன்னேற்ற எண்ணமோ இல்லாமல் தோட்டத்தையே நம்பியிருந்த மக்கள்தாம் அதிகம் பேர். இதனாலேயே மற்ற இனங்களோடு ஒப்பிடுகையில் மலேசியத் தமிழர்களின் முன்னேற்றம் என்பது மிகவும் மந்தமாகவும் பின்தங்கியும் இருக்கிறது. இன்றும்கூட கல்வி, பொருளியல், சமூகம், அரசியல், தொழில் வாய்ப்பு என பல துறைகளிலும் தமிழர்கள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.

மலேசிய நாட்டின் அரசாங்க கொள்கைகளும் தமிழர்களுடைய பின்னடைவுக்கு ஒருவகையில் காரணமாக அமைந்துவிட்டன என்பதும் மறுப்பதற்கு இல்லை. தோட்டப்புறத்து வாழ்க்கைச் சூழ்நிலைகள் இன்று அடியோடு மாறி இருந்தாலும், வளமும் வசதியும் இன்று பெருவாரியான தமிழர் வீடுகளில் ஏறி இருந்தாலும் மலேசியத் தமிழர்கள் செல்ல வேண்டிய பயணம் இன்னும் தொலைவாக இருக்கிறது; அவர்கள் ஏற வேண்டிய உயரங்கள் இன்னும் உச்சமாக இருக்கின்றன.

சுதந்திரம் என்பதின் முதலெழுத் தெங்கோ
தொலைந்து போனது; தந்திரம் பிழைத்து!
இதம்தரும் என்றே ஏற்ற சுதந்திரம்
எப்படி எங்களை விட்டுப் பிரிந்தது?

என்பதே இன்றும் எமது மக்களின் இதயங்களில் எழும்பிக்கொண்டிருக்கும் வினாவாக இருக்கின்றது.



7, 8ஆம் நூற்றாண்டுகள் முதற்கொண்டே பழந்தமிழருக்கு மலாயாவுடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரியவருகிறது. தமிழ் மன்னன் இராசேந்திர சோழன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டு மலாயாவில் கடாரம் எனும் பெயரில் நிலப்பரப்பை உருவாக்கி ஆட்சி செய்துள்ள வரலாறு உண்டு.


தொடக்க காலத்தில் வணிகத் தொடர்புகளின் பொருட்டுதான் தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்துள்ளனர். கடாரத்தில்(Kedah) பூசாங் நதிக்கரையில் (Sungai Bujang) குடியிருப்புகளை அமைத்தனர். வந்தவர்கள் சைவர்கள் என்பதால் பூசாங்கில் சிவாலயங்களையும் கட்டினர். அவ்வாலயங்களின் எச்சங்கள் இன்றும் இருக்கின்றன. அவை தமிழன் வரலாற்றைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.


படத்தில் காணும் ஆலயங்களின் எச்சங்கள் இன்று படிப்படியாக அழிந்துவருகின்றன. இவை முற்றாக அழிவதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு முன்பாக இந்திய அல்லது தமிழக அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை இங்கு வருகை மேற்கொண்டு அகழ்வாய்வு செய்தால் பற்பல உண்மைகள் வெளிவரக்கூடும். நமது வரலாற்றுச் சான்றுகளைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்த இயலும்.

இதில் சிக்கல் என்னவென்றால், தமிழக, இந்திய எல்லைக்குள் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளை எல்லாம் அழித்தொழிக்கும் நடுவண் அரசையும் அதற்குத் துணைபோகும் தமிழக அரசையும் நம்புவதும் எதிர்பார்ப்பதும் ஏமாற்றத்திலேயே போய் முடியலாம்.


வரலாற்று நூல்கள், கல்வெட்டுகள், புதைபொருள்கள் ஆகியவை தவிர மலாயா நாட்டின் மக்களுடைய மொழியோடும், பண்பாட்டோடும், பழக்க வழக்கத்தோடும் தமிழரின் அடையாளங்கள் இரண்டறக் கலந்துள்ளன.


குறிப்பாக மலாய்மொழியில் தமிழ்ச்சொற்களும் தமிழ் மூலத்தைக் கொண்ட வடமொழிச் சொற்களும் நிறைய கலந்திருக்கின்றன. காட்டாக, அம்மா(Emak), ஐயா(Ayah), நகரம்(Negara), கடை(Kedai), கப்பல்(Kapal), கட்டில்(Katil), பெட்டி(Peti), கெண்டி(Kendi), அரசன்(இராஜா - Raja), மாணிக்கம்(Manikam), ஆகமம்(Agama), பத்தி(பக்தி - Bakti), மந்திரம் (Mantera) இப்படியான பல்லாயிரம் சொற்கள் இருக்கின்றன.



தமிழர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக மலாயா நாட்டு மக்கள் பெற்றுள்ள பயன்கள் பலவுண்டு. உழவு, பயிர்த்தொழில், ஏர் உழுதல், நீர் பாசனம் செய்தல் ஆகிய தொழில்களைக் கற்றுக்கொண்டனர். வணிக முறைகள், நாணயத்தைப் பயன்படுத்துதல், இரும்பு ஆயுதங்கள் செய்தல், பொன், வெள்ளி ஆகியவற்றைக் கொண்டு அணிகலன்கள் உருவாக்குதல், மருத்துவம் ஆகிய கலைகளை அறிந்துகொண்டனர். தமிழரைப் போல பருத்தி, பட்டு ஆகிய ஆடைகளை நெசவு செய்து அணிந்தனர். சமையல் செய்வதில் தமிழரைப் போலவே தானிய வகை, மணப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். தமிழ்க் இசை, நடனம், பாவைக்கூத்து போன்ற கலைகளை தங்கள் கலைகளோடு பிணைத்துக்கொண்டனர். வெற்றிலைப் பாக்கு மாற்றி திருமணம் செய்வது போன்ற திருமண சடங்கில் வெற்றிலைப் பாக்கை ஏற்றுக்கொண்டனர். கையில் மருதாணி வைத்து அழகு பார்த்தனர். பள்ளாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை தங்கள் வயப்படுத்திக்கொண்டனர்.


இரண்டாம் கட்டமாக, 1400களில் மலாக்கா எனும் நகரம் மன்னன் பரமேசுவரனால் மலாயாவில் உருவாக்கப்பட்டது. இவருடைய அரச தலைமுறை 110 ஆண்டுகள் மலாக்காவை ஆட்சி செய்தது. தென்கிழக்கு ஆசியாவில் மலாக்கா தலைசிறந்த வணிக நகரமாக இருந்தபோது மீண்டும் வணிக நோக்கத்திற்காகத் தமிழர்கள் மலாயாவுக்கு வந்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் உள்நாட்டு பெண்களை மணந்துகொண்டு இங்கேயே தங்கிவிட்டனர்.

இவர்களின் தலைமுறை இன்று தங்களின் மொழி, இன, சமய, பண்பாட்டு அடையாளங்களைத் தொலைத்துவிட்டு இருக்கின்றனர். உள்நாட்டு மலாய் மொழியின பண்பாட்டோடு ஏற்பட்ட கலப்பின் காரணமாக இப்போது புதிய இனம்போல மாறி இருக்கின்றனர். இவர்கள் ‘மலாக்கா செட்டிகள்’ என்று இன்றைய மலேசியாவில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் தமிழர் பரம்பரையில் வந்தவர்களாக இருந்தாலும் மலேசியத் தமிழர்களிடமிருந்து தனித்தே இருக்கின்றனர். தமிழரே அல்லாதவர் போலாகிவிட்டனர்.

வரலாற்றுக் காலத்தைக் கடந்து மலாயாவை ஆங்கிலேயர் கைப்பற்றிய பிறகு பெருவாரியான எண்ணிக்கையில் தென்னிந்தியத் தமிழர்கள் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டனர். இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கும், கரும்புக் காடுகளில் பணியாற்றவும், காடுகளை அழித்து நாடாக்கவும் சஞ்சிக்கூலிகளாக வந்த தமிழர்களை ஆங்கிலேயர் பயன்படுத்தினர். (சஞ்சி – மலாய்மொழியில் Janji அதாவது ஒப்பந்தம்)

இரப்பர் தோட்டங்களில் தமிழர்கள் பட்ட இன்னல்களும் கொடுமைகளும் அவலங்களும் சொற்களால் விவரிக்க முடியாதவை. காடுகளை அழிக்கும் போது கொடிய விலங்குகளால் தக்கப்பட்டு இறந்தவர்கள், இரப்பர் காடுகளில் நஞ்சுயிரிகளால் தாக்கப்பட்டவர்கள், மலேரியா காய்ச்சல், கொடிய நோய்கள், மருத்துவ வசதியின்மை முதலிய காரணங்களால் மரணத்தை தழுவியவர்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் 12 இலக்கம்(இலட்சம்) தமிழர்கள் மலாயாவில் மாண்டுபோயிருக்கின்றனர்.

இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயரைத் தோற்கடித்து மலாயாவை சப்பானியர் கைப்பற்றியபோது தமிழர்கள் பட்ட துன்பங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. சயாம் தொடர்வண்டி திட்டத்திற்கு (சயாம் ரயில்வே) வேலை செய்ய ஆயிரக்கணக்கில் நம்மவர்கள் இரவோடு இரவாகக் கொண்டுசெல்லப் பட்டுள்ளனர். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்களா இல்லையா? என்றுகூட தெரியாமல் தவித்திருந்தனர் நம் மக்கள். இப்படி தண்டவாளம் அமைக்க சென்றவர்கள் கொத்துக் கொத்தாக மடிந்துபோய் கும்பல் கும்பலாகப் புதைக்கபட்டுள்ளனர்.

இத்தனைக்கும் இடையில் மலாயாவையும், 1957க்குப் பிறகு மலேசியாவையும் ஒரு வளமிக்க நாடாக உருவாக்குவதில் தமிழர்களி பங்கு மிகப்பெரியது என்றால் மிகையல்ல. மலேசியா விவசாய நாடாக இருந்த காலத்தில் அதனுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உறுதிணையாக இருந்த இரப்பர், செம்பனை உற்பத்தி, கரும்பு, கொக்கோ முதலான தோட்டத்துறைகளில் இரத்தம் சிந்தி தமிழ் மக்கள் உழைத்தார்கள்.



இன்றைய நிலையில் மலேசியத் தமிழர்கள்(இந்தியர்கள்) பல்வேறு நிலைகளில் முன்னேற்றம் கண்டுள்ளனர். உயரிய கல்விக் கற்றோராக, தொழிலதிபர்களாக, நிபுணர்களாக, செல்வந்தர்களாக, பெரும் கோடிசுவரர்களாக உருவாகி இருக்கின்றனர். ஏழைகளாக இந்த நாட்டில் குடியேறியவர்கள் இன்று வளமான வாழ்க்கை வாழ்கின்றனர். இவர்களுக்கு இடையில் இன்னும் நூறாண்டுகளுக்கு முன்பு மலாயா வந்து தோட்டங்களில் வாழ்ந்த அதே இக்கட்டான சூழலில் வாழ்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். பல்வேறு சமுதாயத்தில் சிக்கல்களிலும் சீர்கேடுகளிலும் மாட்டிக்கொண்டு தவிப்பவர்களும் ஏராளமாக உள்ளனர்.


எது எப்படி இருப்பினும் தமிழர்கள் இன்று நாட்டின் குடியுரிமை பெற்ற இனமாக இந்தியர்கள் என்ற முத்திரையோடு வாழ்த்து வருகின்றனர். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற உரிமைகளுக்காக இன்றளவும் போராடி போராடி தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.


இருக்கின்ற உலக நடப்பையும் மலேசிய சூழலையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கையில், அடுத்து வருகின்ற ஐம்பது ஆண்டுகளில் மலேசியத் தமிழர்கள் தங்களின் மரபியல் அடையாளங்களான மொழி, இனம், சமயம், கலை, பண்பாடு, இலக்கியம், வரலாறு, வாழ்வியல் ஆகிய அனைத்தையும் படிப்படியாக இழந்துவிட்டு புதிய மலேசிய சமுதாயமாக உருமாறி போகக்கூடிய நிலைமை வந்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.


காரணம், மேலே சொன்னதுபோல மலாக்காவில் இதே தமிழ் இனம்தான் கண்முன்னாலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறது வேறொரு தோற்றத்தில்.. வேறொரு அடையாளத்தில்..!