Tuesday, November 8, 2011

நேற்றிரவு பெய்த மழை!

தூறும் மழைச்சாரலும்
உன் புன்னகையும்
ஒன்றெனவே தோன்றியது
நம்முடன் கைகோர்த்து நாட்கள் நடந்தபோது...

இன்று...

நாட்காட்டிக் காகிதங்கள்
என்னைக் கிழித்துத்
தன்னைத் தொலைக்கிறது...

இன்றும் உன்னை ஒப்பிடுகிறது மனது...

வெடித்துக்கிடக்கும் நிலத்தைப்பார்த்து
வெளிரிச்சிரிக்கும் மேகத்தோடு...!

Sunday, September 25, 2011

நான் வளர்கிறேனே மம்மி!

குழந்தைகள் தங்களுக்குள்ளே யுள்ள பட்டாம்பூச்சியை உணர்ந்து கொள்ள உதவுவதுதான் உண்மையான கல்வி. ஒவ்வொரு குழந்தையும் தாங்கள் என்னவாகப் போகிறோம், என்னென்ன ஆற்றல்கள் தங்களுக்குள் புதைந்திருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்வது பள்ளிப்பருவத்தில்தான். பள்ளிப்பருவம் எவ்வளவு மகத்தான காலகட்டம் என்பதை பெற்றோரும் ஆசிரியரும் புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால், அவர்களின் வாழ்க்கை ஒளிமயமாகும்.

குழந்தைகள் தங்களுக்குள்ளிருக்கும் திறமைகள் என்ன என்பதை அவர்களே புரிந்து கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவதுதான் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கடமையாகும். அதிலும் கண்பார்வையற்ற காது கேளாத குழந்தைகளின் பெற்றோருக்கு இப்பொறுப்பு இன்னும் அதிகம். பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து, கலந்தாலோசித்து ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும். குழந்தைகளின் ஆற்றல் வெளிப்பட உங்களது சிறிய தூண்டுதல் போதுமானது. தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராயவும், பரிசோதனைகளைச் செய்யவும், பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் குழந்தைகளிடம் ஏராளமான ஆற்றல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

பீஜோ என்ற மேல்நாட்டு கல்வி நிபுணர், வளரும் குழந்தைகளின் பாடத்திட்டத்திற்கான அடிப்படை நோக்கமாகக் குறிப்பிடுவது... குழந்தைகள் தங்கள் சூழலில் அதிகபட்ச வளர்ச்சியை அடைய உதவ வேண்டும் என்பதுதான்.

ஜோஹன் பெஸ்ட்லோசிஸ் என்ற மேல்நாட்டு அறிஞர், ‘குழந்தைகளின் கல்வியானது, அவர்களது இயற்கையான வளர்ச்சியை அடிப்படையாக வைத்திருக்க வேண்டும்', என்று வலியுறுத்தினார். அம்மாக்கள்தான் சிறந்த ஆசிரியர்களாக இருக்க முடியும் என்றும், வீடுதான் சிறந்த பள்ளிக்கூடமாக இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

குழந்தைகள் விளையாட்டின் மூலம் பாடம் பயிலும், கிண்டர்கார்டன் என்ற முறை 1930 ஜெர்மனியில் உருவானது. ஒரு குழந்தை முழு மனிதனாக உருவாக இந்த கிண்டர் கார்டன் கல்வி முறை உதவும் என்ற எண்ணத்தில் ஃபிரெட்ரிக் ஃப்ரீவெல் என்பவர் உருவாக்கினார். வளர்ந்த குழந்தைகளின் பாடத்திட்டத்தைவிட வித்தியாசமான கல்வித்திட்டம் இளங்குழந்தைகளுக்கு தேவை என்பதால், களிமண் பொம்மை செய்தல், வரைதல், பிளாக்குகளைப் பயன்படுத்தி கற்றல் போன்ற வழிமுறைகளை அறிமுகப்படுத்தினார். கே.ஜி. வகுப்புகளிலிருந்து முதல் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் குழந்தைக்கு பய உணர்ச்சி ஏற்படுவது இயற்கையே. கே.ஜி. வகுப்புகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தாக வேண்டும் என்பது போன்ற கட்டளைகளை அதிகம் திணிக்க மாட்டார்கள். விரும்பிய நேரத்திற்கு பள்ளிக் கூடத்துக்கு பெற்றோருடன் சென்று கொண்டிருந்த குழந்தை, முதல் வகுப்பிற்குள் நுழையும்போது சில ஒழுங்கு முறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறது. பசிக்கும் போது சாப்பிடலாம், தூக்கம் வந்தால் தூங்கலாம் என்று கேஜி. வகுப்புகளில் பழகிய குழந்தைக்கு முதல் வகுப்பின் சூழல் முற்றிலும் புதிதாயிருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வகுப்பிற்கு வந்தாக வேண்டும், உணவு இடைவேளையின் போதுதான் சாப்பிட வேண்டும் என்பன போன்ற சில கட்டளைகளைப் பின்பற்ற வேண்டி யிருக்கிறது. இதனால்தான் முதல் வகுப்பில் சேர்ந்த சில நாட்களிலேயே பள்ளிக்குப் போகமாட்டேன் என்று குழந்தைகள் அடம் பிடிப்பார்கள்.இரண்டு வருடங்களாக அனுப்பிய அதே பள்ளிதானே.அப்போதெல்லாம் அழாமல் சென்ற குழந்தை இப்போது ஏன் அடம் பிடிக்கிறது என்று புரியாமல் பெற்றோர்கள் விழிப்பார்கள். காரணம் இதுதான்.

புதிதாக விதிக்கப்பட்டுள்ள விதிகளைப் பார்த்து குழந்தை பயப்படுகிறது. அடுத்து, இதுவரை குழந்தையாக மதிக்கப்பட்ட நம்மை இப்போது பெரியவனாக்கி பார்ப்பதையும், திடீரென தம் மேல் பொறுப்புகள் சுமத்தப்படுவதையும் அது விரும்புவதில்லை.

இந்நிலையைத் தவிர்க்கத்தான் ‘இயற்கையோடு இணைந்த கல்விமுறை’ என்ற அமைப்பை ரவீந்திரநாத் தாகூர் வலியுறுத்தினார். மேலை நாடுகளில் பிரபலமானமுறை இது. வகுப்பறை, மேஜை, நாற்காலி, பிரம்பு என பயமுறுத்தும் வழக்கமான விஷயங்கள் இல்லாமல், மரம், செடி கொடிகளுக்கிடையே வகுப்புகள் நடத்தும் வித்தியாசமான முறை இது. இந்த முறை எல்லா பள்ளிகளிலும் பின்பற்றலாம். பள்ளி என்றாலே ஏற்படும் பயத்தை அகற்றி, விருப்பத்தோடு முன் வந்து மாணவர்களே கற்றுக் கொள்வர்.

முதல் வகுப்பு குழந்தைகளுக்கு ராகம் போட்டு பாடல்களைக் கற்றுத்தரும் முறை நம் பள்ளிகளில் உள்ளது. இது மிகவும் பயனுள்ள பாடமுறை. வகுப்பறையில் இப்படி பாட்டுப் பாடி விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் குழந்தை வீட்டிலும் ராகம் போட்டுப் பேசும். வாய்விட்டு, சத்தமாக எல்லாரும் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதால், வகுப்பறையில் சக மாணவர்களோடு சேர்ந்து சத்தமாக பாட்டுப் பாடும் குழந்தை வீட்டில் ‘சாப்பாடு வேண்டுமா?’ என்று கேட்டால் கூட ‘ஆமாம், வேண்டும்...’ என்பதை பத்து வீட்டிற்கு கேட்கும்படி சத்தமாய் சொல்லும். வகுப்பறையில் சத்தமாகப் பேசிப் பழகியதன் காரணமாகத்தான் இப்படி பேசுகிறது என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, ‘ஏன் எட்டு ஊருக்கு கேட்கற மாதிரி கத்தற?’ என்று முதுகில் அடிக்கக்கூடாது.

இந்த வயதுக் குழந்தைகள் வீட்டில் நாம் சொல்லித் தரும் பாடங்களை உன்னிப்பாகக் கவனிக்கமாட்டார்கள். ம்...ம் என்று கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். திடீரென 'அம்மா, பக்கத்து வீட்டுல சினிமா ஓடுது. நாமும் டி.வி போடலாம்...' என்பார்கள். ‘அப்ப, இவ்வளவு நேரம் நான் சொல்லிக் கொடுத்த பாடத்தை கவனிக்காம, பாட்டு கேட்டுகிட்டிருந்தியா?’ என்று கேள்வியெழுப்பாதீர்கள். இந்த வயதில் கவனக்குறைவும், கவனச்சிதைவும் ஏற்படுவது இயல்புதான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

முதல் வகுப்பு படிக்கும் குழந்தைகளால் அதிகநேரம் ஒரே மூச்சாய், கவனமாய் பாடத்தை கவனிக்க முடியாது. சில குழந்தைகள் பாதிபடிப்பிலேயே தூங்கி வழியும். புத்தகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்கவும் முடியாது. பத்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பாடம் சொல்லித் தந்து வெறுப்பேற்றாதீர்கள். அவ்வப்போது இடைவெளி அவசியம். பதினைந்து நிமிடங்கள் படித்தாயா? சரி, கொஞ்ச நேரம் விளையாடு’ என்று அனுப்பி வையுங்கள்.

இல்லாவிட்டால் படிக்கும் முறையையாவது மாற்றுங்கள். பத்து நிமிடங்கள் கணக்குபாடம் படித்துவிட்டால், அடுத்து தமிழ் அல்லது ஆங்கில ரைம்ஸ்களுக்கு நேரம் ஒதுக்கிவிடுங்கள். அதுவும், உட்கார வைத்து சொல்லித் தராமல் ரைம்ஸ் அடங்கிய ஒலிநாடா, அல்லது சி.டி.களைப் போட்டு அதைக் கேட்கச் செய்யலாம். இப்படி டேப்பில் பாடலாக கேட்கும்போது இன்னும் ஆழமாக மனதில் பதியும்.

இதே போல் கதைகள் அடங்கிய ஒலிநாடாக்களையும் கேட்கச் செய்யலாம். வார்த்தைகளைச் சரியாக உச்சரித்துப் பழக இவை உதவும்.

அதிக நேரம் டி.வி. பார்க்கும் பழக்கத்தை குறைக்க வைத்து, புத்தகம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துங் கள். அதே போல், க்ரெயான்கள் மற்றும், கலர் பென்சில்களால் அவர்கள் வரையும் படங்களை வீட்டுச் சுவரில் மாட்டி வையுங்கள். மறக் காமல் உங்கள் உறவினர் கள் வரும்போது, இது இவன் வரைந்த படம் என்று பெருமையாய் சொல்லுங்கள். மற்றவர்களின் பாராட்டு, ஆதரவும் இன்னும் இதைப் போல நிறைய செய்ய வேண்டும் என்ற உற்சாகத் தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தும். நேரடியாக வற்புறுத்தி செய்யச் சொல்வதை விட, இப்படி பாராட்டுவதன் மூலம் உங்கள் குழந்தையின் திறமையை வளர்க்கலாம்

தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை

ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் குழந்தையின் உடல் நலம், வளர்ச்சி குறித்த பல பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு தாய் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் வழிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தை பிறக்கும் காலம்

ஒரு குழந்தை கருவில் உருவான காலத்தில் இருந்து 37 முதல் 40 வாரங்களில் பிறக்க வேண்டும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் முழுவளர்ச்சி பெற்ற, குறித்த காலத்தில் பிறந்த குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றன.

37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்கு முன் பிறந்த குழந்தைகள்.

41 வாரங்களுக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்குப் பின்பிறந்த குழந்தைகள்.

குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் முழுமையான வளர்ச்சி நிலையை அடையாததால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

பிறக்கும் குழந்தையின் எடை

ஒரு இந்தியக் குழந்தை பிறக்கும் போது இருக்க வேண்டிய சராசரி எடை 2.5 முதல் 3.5 கிலோ கிராம் ஆகும்.

எடை 2 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் இந்தக் குழந்தைகளை ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள் என்று அழைக்கிறோம்.

உடல் எடை அதிகரித்து, உடல் இயக்கங்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படும் வரை, இந்தக் குழந்தைகளை NEONATAL INTENSIVE CARE UNIT (NICU) என்று அழைக்கப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

எடை 1.5 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் அந்தக் குழந்தைகள் மிக ஆபத்தான நிலையில் உள்ளவையாகக் கருதப்பட்டு மிகப் பிரத்தியேகக் கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.

பராமரிப்பில் முக்கியமானவை:

தாய்ப்பால் கொடுத்தல்
மசாஜ்
குளிப்பாட்டுதல்,
தோல் பராமரிப்பு
கண்கள், தொப்புள் கொடி பராமரிப்பு
எடை
தடுப்பு ஊசிகள்
பிற உணவுகள் கொடுத்தல்
தாய்ப்பால்

தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன.

இன்றைய சமுதாயச் சூழலில் பல தாய்மார்களுக்குப் பாலூட்டும் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பிற்காலத்தில் குழந்தைகள் பல நோய்களை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.

தாய்ப்பால் ஊட்டுவதால் உள்ள நன்மைகள்:

தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது.

தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது.

குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது.

கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.

குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லா சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது.

பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் செரிமானம் ஆகும்.

அலர்ஜி ஆகும் வாய்ப்புகள் குறைவு.

குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் பல நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.

தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்’ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் ஊட்டுவதை எப்போது துவங்குவது?

குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் துவங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.

நார்மல் டெலிவரி எனில் பிரசவம் ஆன 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பாலூட்டத் துவங்கலாம்.

சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளி வந்த உடன் பாலூட்டத் துவங்கிவிடலாம்.

சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும்.

ஒரு சராசரி இந்தியத் தாயின் உடலில் ஒரு நாளில் சுரக்கும் பாலின் அளவு 700 மி.லிட்டர் முதல் 1000 மி. லிட்டர் வரை உள்ளது.

குழந்தைக்கு 1 வயது ஆகும் வரையிலும் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். 1 ஒன்றரை வயதுவரை ஊட்டுவது நன்று.

சில தகவல்கள்.....

கொலஸ்ட்ரம்

பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த கொலஸ்ட்ரம் என்ற வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும்.

தாய்ப்பால்

பிரசவம் ஆன மூன்று நாட்களுக்குப் பின் சுரக்கத் துவங்கும் பாலில் குழந்தைக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருக்கும்.

ஊட்டும் போது முதலில் வரும் பால்

பாலூட்டத் துவங்கும் போது முதலில் வரும் பாலில் புரதம், மாவுச் சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆகியவை அதிகம் இருக்கும்.

கடைசியில் வரும் பால்

பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.

தடுப்பூசி: பிற உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கலாம்.

குழந்தைகளின் மனதுக்குள்ளே....


குழந்தையின் மூளையானது பல ரகசியங்களை உள்ளடக்கியது. அதன் விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள். கருவறையில் தொடங்குகிறது இதன் கதை. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்! கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்-படுத்தப் பட்டவை. தான்தோன்றித் தனமாக அல்ல.


குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை ஏறத்தாழ "வெறுமையானது". அதாவது எதனையுமே கற்றுக் கொள்வதற்கு அது தயாராக இருக்கும். அவர்கள் வளர வளர கண்களால் காணும் எதுவும், காதுகளால் கேட்கின்ற எதுவும், தொடுகையினால் உணரும் எதுவும், நாக்கினாலே ருசிக்கின்ற எதுவும் அவர்களது 'புதிய' மூளையில் பதிகின்றன. எங்களுக்கு சாதாரணமாகத் தோன்றும் நடப்புகள் எல்லாம் அவர்கள் புதியதாகக் கற்றுக் கொள்வதாக இருக்கும். இவை அவர்களது மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நியூரோன்களின் கோர்-வைகளிலே தாங்கள் புரிந்து கொண்டவற்றைச் சேமிக்கிறார்கள்.

குழந்தையின் மூளை கற்றுக் கொளவதற்கு வசதியான ஓர் எந்திரம்! குறுகிய காலத்தில் அவள் என்ன எல்லாம் கற்றுக் கொள்கிறாள்? தவழுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு, ஆராய்ந்து திரிவதற்கு என்று எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்குப் பின்னர் மனிதருக்கென்றே உரிய சிறப்புத் தன்மையான மொழியைக் கற்க வேண்டும். கல்வி நீண்டு கொண்டே போகும். வாழ்நாள் முழுவதும்.

ஆரம்ப கால மன வளர்ச்சி நாம் எவ்வளவுக்கு குழந்தையுடன் கொஞ்சி கட்டிப்பிடித்து விளையாடுகிறோமோ அந்த அளவுக்கு நல்ல மன வளர்ச்சி இருக்கும். இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். அவர்கள் தரத்துக்கு நாம் இறங்கிவந்து விளையாட வேண்டும். மேற்கொண்டு குழந்தையின் மன வளர்ச்சி எப்படி நடைபெறுகிறது?

பெற்றோர்கள் தங்கள் 8-10 மாதக் குழந்தையை அவளது ஆசனத்தில் இருத்திவிட்டு, சமையலறையில் அடுத்த நேரத்திற்கான உணவைத் தயார் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். குழந்தை இவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கவனமாக அவதானிப்பாள். இருவரும் வேகமாக ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போகிறார்கள். எதை எதையோ எடுக்கிறார்கள். பிறகு அவற்றை வேறு எங்கோ வைக்கிறார்கள். இதையெல்லாம் செய்யும் போது, இருவரும் ஏதோ ஒருவருக்கு ஒருவர் கூறிக் கொள்கிறார்கள். இவ்வளவு சிக்கலான நடப்புகளையும் குழந்தைகள் மிக அவதானமாக தங்கள் மனதுக்குள்ளே வாங்கிக் கொள்கின்றன. அவர்கள் மேலும் வளர்ந்து வர, இவை எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும் அவற்றின் தொடர்ச்சியையும் மொழியையும் எவ்வாறோ குழந்தைகள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். ஒவ்வொரு பொருளுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். அதே போல ஒவ்வொரு செயலுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். ஆயிரமாயிரம் பொருள்களுக்கும் ஆயிரமாயிரம் செயல்-களுக்கும் அவர்கள் இவ்வாறான தொடர்புகளை மனதில் உண்டாக்குவார்கள்.

அவர்கள் 12-18 மாத வயதை எய்தும் போது, கண்ணோக்கு, திசை, புறமொழி, சைகைகள், உணர்ச்சிகள், மனநெகிழ்ச்சி போன்றவற்றையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் கொண்டி-ருப்பார்கள். அச்சமயத்தில் அவர்கள் நாம் பார்க்கின்ற திசையைப் புரிந்து கொண்டு அதை நோக்கிப் பார்ப்பார்கள். அந்தத் திசையில், அதாவது நாம் நோக்குகின்ற திசையில், காணும் பொருளை அந்நேரத்தில் நாம் சொல்லும் வார்த்தையுடன் பொருத்தி மனதில் இருத்திக் கொள்வார்கள். அதே வேளையில் நாம் வெளிப்படுத்தும் சந்தேகங்களையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். எடுத்துக் காட்டாக, ஏதோ ஒரு புத்தகத்தைக் குழந்தையுடன் சேர்ந்து படிக்கும்போது, அங்கு படத்தில் இருக்கும் ஒரு மிருகத்தைக் காட்டி அதன் பெயரென்ன என்று அவள் கேட்கும்போது நாம் ஒரு பெயரைச் சொல்லி ஆனால் அது சரியானதா தெரியவில்லை என்று ஒரு சந்தேகத்தையும் சேர்த்துக் கொண்டால் அவள் அந்தச் சொல்லை அந்த மிருகத்துடன் தொடர்பு படுத்தாமல் இலகுவாக மறந்து விடுவாள்.

இவ்வயதுக் குழந்தைகள் எந்தச் சிக்கலான செயலையும் சிறு சிறு செயல்களாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுடன் விளையாடும்போது சில பொருள்களை எடுத்து ஒரு விளையாட்டு வண்டியில் வைத்து இழுத்துக் கொண்டு போய் இன்னொரு இடத்தில் அவற்றை வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். பொருள்களை ஒர் இடத்திலிருந்து இன்னோர் இடத்-திற்குக் கொண்டு போதல் என்ற இந்தச் செயலைக் குழந்தைகள் மிகச் சரியாக சிறிய செயல்களாக அறிந்து கொள்கிறார்கள். இதைக் கவனிக்கும் குழந்தையும் அதே போல ஒவ்வொரு பொருளாக எடுத்து வைத்து நாம் செய்ததை அப்படியே செய்து காட்டும் திறமை வந்துவிடும்.

பிள்ளைகளின் மூளை முதல் மூன்று ஆண்டுகளுக்கு வேகமாக வளர்கிறது. இந்தக் காலகட்டத்தில் பல கோடி தொடுப்புகள் மூளைக்குள் ஏற்படுத்தப் படுகின்றன. இந்தத் தொடுப்புகளே எதிர்காலத்தில் அவர்கள் கற்கும் திறனையும், உணர்ச்சிகளையும், நடத்தையையும் நிர்ணயிக்கின்றன. குழந்தைகளின் மூளை உயிரணுக்களின் வளர்ச்சி அவர்கள் வளரும் சூழலையும் அனுபவங்களையும் பொறுத்து இருக்கும். பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்க வேண்டும்.

Friday, July 1, 2011


வெள்ளைக்கார துரைகளும், கங்காணி கறுப்புத் துரைகளும் எமது தோட்டத்துத் தாய்க்குலத்திற்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளை வகைதொகையின்றி செய்திருக்கிறார்கள். பெண் தொழிலாளர்கள் பல்வேறு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதைத் தோட்டப்புறத்தில் பாடப்பட்ட நாட்டுப்புற இலக்கியத்தில் காண முடிகிறது. வாழ்வுக்கே போராட்டமாக இருந்த நேரத்தில் மானத்தைக் காத்துக்கொள்ள போராடிய வேண்டிய இக்கட்டான நிலைமை தனக்கு ஏற்பட்டதை ஒரு பாடலில் இப்படி சொல்கிறாள் ஒருத்தி.

உள்ளத நான்சொல்ல வந்தேன் கேள்!
காலையிலே நாலு மணிக்குக் கேள்
கிழக்குமணி அடிக்கும்போது டிங்கு டிங்குதான்
நான் போகாவிட்டால் சோறுமில்லே!
ஐயய்யோ என்ன செய்வேன்?
பெரிய மம்முட்டி எடுத்துப் புறப்பட்டு நாபோனேன்
சுருக்கா வரலேன்னு ஐயா அடிசாரே!
அந்தக்கம்பு எடுத்தில்ல அடிசாரு கங்காணி
ஐயய்யோ அம்மா! அப்பா! அடுக்குமா?
யாருக்குத்தான் பதிசொல்வேன் துரைமாரே!
சாமக்கோழி கூவுது எழுப்பறான்;
சாமக்காரன் கூப்பிடறான்!
விறுவிறுன்னு தண்ணிபோடு எல்லம்மா!
இடுப்புத்துணி எங்கேடி வச்ச எல்லம்மா!
துறுதுறுன்னு பேசிக்கிட்டு துரை வர்றாரு!
குசுகுசுன்னு பேசிக்கிட்டு கிராணி வர்றாரு!
ஏட்டைப் புறட்டுறாரு எல்லம்மாவ கூப்பிடுறாரு
கடுகடுன்னு கூப்பிடுறாரு காத்தாயிய கூப்பிடுறாரு
விறுவிறுன்னு போறாரு வீரம்மாவ கூப்பிடுறாரு
ஏழாம் நம்பர் பள்ளத்தில் எள்ளுச்செடி தோட்டத்திலே
ஏஞ்சொல்லி வெட்டும்போது எல்லம்மாள
அந்த வெட்டு பார்க்கும் கங்காணி
விறுவிறுன்னு போயி தாவணியப் புடிச்சாரு
தங்கக் காப்பு என்று கையைப் புடிசாரு...

இப்படி இருந்த பால்மரக் காடுகளில் தாம் பட்ட இன்னல்களைத் தாங்க முடியாமல் உயிரையே மாய்த்துக்கொண்டவர்கள் பலர் உள்ளனர் என்ற உண்மையை கீழே வரும் பாடல் போட்டு உடைக்கிறது.

சாலையிலே ரெண்டு மரம்
சர்க்காரு வெச்ச மரம்
ஓங்கி வளர்ந்த மரம்
என் தங்க ரத்தினமே
அது எனக்குத் தூக்குமரம்

தோட்டத்து வாழ்க்கை தொல்லைகளைத் தாங்க முடியாமல் பலர் தாயகம் திரும்பியுள்ளனர். குறிப்பாக, இரப்பர் விலை சரிவு கண்ட காலத்தில் பல்லாயிரம்பேர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மீண்டும் எப்படியோ தென்னிந்தியாவுக்கே திரும்பி போய்விட்டனர். அப்படி போகும் போதும்கூட மண்ணை நேசிக்கும் மாண்புடைய எமது தமிழர் கனத்த இதயத்தோடுதான் போயிருக்கின்றனர். இதைபற்றி ஒரு பாடல் இப்படி கூறுகிறது.

போய் வாரேன் பால்மரமே
போய் வாரேன் பால்மரமே
பவுனுக்குப் பவுனு ரப்பர்
பாலு வித்த காலம் போச்சு
சீட்டுப்பால் ஒரு விலையும்
கோட்டுப்பால் ஒரு விலையும்
மங்குப்பால் ஒரு விலையும்
மண்ணுப்பால் ஒரு விலையும்
சிங்கம்போல விலையை விற்றார்
பங்கம்போல நிலைகுலைந்தார்
போய் வாரேன் பால்மரமே
போய் வாரேன் பால்மரமே

இத்தனை சிரமங்களுக்கு நடுவிலும் வேறு நாதியில்லாத காரணத்தால் தமிழ் மக்கள் தோட்டத்தையே நம்பி வாழ வேண்டிய சூழ்நிலையில் சிக்கிக்கொண்டனர். மேலும், தோட்டத்தில் மக்களுக்கு வேண்டிய சில அடிப்படைகளை வெள்ளைக்கார நிருவாகம் செய்து கொடுத்திருந்தது. குறிப்பாக, குடியிருக்க வீடு, குடிநீர், குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம், கூத்துமேடை, கள்ளுக்கடை, கோயில் என்று சில வசதிகளைச் செய்துகொடுத்து மக்களை ஆட்டு மந்தைகளாகத் இரப்பர் காடுகளிலேயே அடைத்து வைத்திருந்தனர்.

இரப்பர் மரங்கள் சூழ்ந்திருந்த திறந்தவெளிச் சிறைகளில் எமது மக்கள் வாழ்வதற்காக நாளும் போராட வேண்டியிருந்தது. தோட்ட நிருவாகத்தின் கொடுமைகள், கங்காணிகளின் அடவாடிகள், சாதிச் சண்டை, கள்ளச் சாராயம், தோட்டத் துண்டாடல், குறைவான ஊதியம், விலைவாசி ஏற்றம், தொழிற்சங்கப் போராட்டம், நாட்டு விடுதலைப் போராட்டம் எனப் பல்வேறு நெருக்கடிகளை அவர்கள் கடந்து வந்திருக்கின்றனர்

1950கள் வரையில் தோட்டப் புறங்களில் அல்லல்பட்ட எமது மக்களுக்கு விடுதலை ஒளி தென்பட தொடங்கியது. பிரிட்டிசாரிடமிருந்து மலாயாவுக்கு விடுதலை பெறுவதற்கான போராட்டங்கள் நாடுமுழுவது தீவிரமடைகின்றன. இந்தப் போராட்டத்தில் தோட்டத்து தொழிற்சங்கங்களும் எமது மக்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு பங்கெடுத்துக் கொள்கின்றனர். அதுபற்றி ஒரு பாடல் இவ்வாறு கூறுகிறது.

எங்கள் மலாயா தங்கிடும் இன்பம்
பொங்கிட வேண்டாவா?
இந்திய சீனம லேசியர் யுரேசியர்
என்றுமிந் நாட்டினிலே – ஒன்றாய்
நன்றுடன் வாழ்ந்திடுவோம்!
யாவரும் ஈண்டு மலாயர்கள் என்று
இணையற்ற தோரின மாகவே மாறிச்
சத்தியச் செந்நெறிப் பன்னூல் கொண்டு
சாந்தியும் பெற்றிடுவோம்
1957இல் மலாயா விடுதலை அடைந்தது. ஆனால் எமது மக்களின் நிலைமை மாறியதா? தோட்டப்புறத்தையே நம்பியிருந்த மனப்போக்கு மாறியதா? நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தோட்டக்காட்டு கும்மிருட்டில் வாழ்ந்தவர்களின் மனம் இன்னும் விடியாமலே இருந்தது என்பதுதான் உண்மை.

மரமிருக்கு உளியிருக்கு
மனமிருக்கு உழைப்பதற்கு
மற்றத் தொழில் நமக்கெதுக்கு வேலப்பா – இதுவே
உற்ற தொழில் இதுநமக்குப் போதுமப்பா

என்று எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையோ முன்னேற்ற எண்ணமோ இல்லாமல் தோட்டத்தையே நம்பியிருந்த மக்கள்தாம் அதிகம் பேர். இதனாலேயே மற்ற இனங்களோடு ஒப்பிடுகையில் மலேசியத் தமிழர்களின் முன்னேற்றம் என்பது மிகவும் மந்தமாகவும் பின்தங்கியும் இருக்கிறது. இன்றும்கூட கல்வி, பொருளியல், சமூகம், அரசியல், தொழில் வாய்ப்பு என பல துறைகளிலும் தமிழர்கள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.

மலேசிய நாட்டின் அரசாங்க கொள்கைகளும் தமிழர்களுடைய பின்னடைவுக்கு ஒருவகையில் காரணமாக அமைந்துவிட்டன என்பதும் மறுப்பதற்கு இல்லை. தோட்டப்புறத்து வாழ்க்கைச் சூழ்நிலைகள் இன்று அடியோடு மாறி இருந்தாலும், வளமும் வசதியும் இன்று பெருவாரியான தமிழர் வீடுகளில் ஏறி இருந்தாலும் மலேசியத் தமிழர்கள் செல்ல வேண்டிய பயணம் இன்னும் தொலைவாக இருக்கிறது; அவர்கள் ஏற வேண்டிய உயரங்கள் இன்னும் உச்சமாக இருக்கின்றன.

சுதந்திரம் என்பதின் முதலெழுத் தெங்கோ
தொலைந்து போனது; தந்திரம் பிழைத்து!
இதம்தரும் என்றே ஏற்ற சுதந்திரம்
எப்படி எங்களை விட்டுப் பிரிந்தது?

என்பதே இன்றும் எமது மக்களின் இதயங்களில் எழும்பிக்கொண்டிருக்கும் வினாவாக இருக்கின்றது.



7, 8ஆம் நூற்றாண்டுகள் முதற்கொண்டே பழந்தமிழருக்கு மலாயாவுடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரியவருகிறது. தமிழ் மன்னன் இராசேந்திர சோழன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டு மலாயாவில் கடாரம் எனும் பெயரில் நிலப்பரப்பை உருவாக்கி ஆட்சி செய்துள்ள வரலாறு உண்டு.


தொடக்க காலத்தில் வணிகத் தொடர்புகளின் பொருட்டுதான் தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்துள்ளனர். கடாரத்தில்(Kedah) பூசாங் நதிக்கரையில் (Sungai Bujang) குடியிருப்புகளை அமைத்தனர். வந்தவர்கள் சைவர்கள் என்பதால் பூசாங்கில் சிவாலயங்களையும் கட்டினர். அவ்வாலயங்களின் எச்சங்கள் இன்றும் இருக்கின்றன. அவை தமிழன் வரலாற்றைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.


படத்தில் காணும் ஆலயங்களின் எச்சங்கள் இன்று படிப்படியாக அழிந்துவருகின்றன. இவை முற்றாக அழிவதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு முன்பாக இந்திய அல்லது தமிழக அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை இங்கு வருகை மேற்கொண்டு அகழ்வாய்வு செய்தால் பற்பல உண்மைகள் வெளிவரக்கூடும். நமது வரலாற்றுச் சான்றுகளைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்த இயலும்.

இதில் சிக்கல் என்னவென்றால், தமிழக, இந்திய எல்லைக்குள் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளை எல்லாம் அழித்தொழிக்கும் நடுவண் அரசையும் அதற்குத் துணைபோகும் தமிழக அரசையும் நம்புவதும் எதிர்பார்ப்பதும் ஏமாற்றத்திலேயே போய் முடியலாம்.


வரலாற்று நூல்கள், கல்வெட்டுகள், புதைபொருள்கள் ஆகியவை தவிர மலாயா நாட்டின் மக்களுடைய மொழியோடும், பண்பாட்டோடும், பழக்க வழக்கத்தோடும் தமிழரின் அடையாளங்கள் இரண்டறக் கலந்துள்ளன.


குறிப்பாக மலாய்மொழியில் தமிழ்ச்சொற்களும் தமிழ் மூலத்தைக் கொண்ட வடமொழிச் சொற்களும் நிறைய கலந்திருக்கின்றன. காட்டாக, அம்மா(Emak), ஐயா(Ayah), நகரம்(Negara), கடை(Kedai), கப்பல்(Kapal), கட்டில்(Katil), பெட்டி(Peti), கெண்டி(Kendi), அரசன்(இராஜா - Raja), மாணிக்கம்(Manikam), ஆகமம்(Agama), பத்தி(பக்தி - Bakti), மந்திரம் (Mantera) இப்படியான பல்லாயிரம் சொற்கள் இருக்கின்றன.



தமிழர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக மலாயா நாட்டு மக்கள் பெற்றுள்ள பயன்கள் பலவுண்டு. உழவு, பயிர்த்தொழில், ஏர் உழுதல், நீர் பாசனம் செய்தல் ஆகிய தொழில்களைக் கற்றுக்கொண்டனர். வணிக முறைகள், நாணயத்தைப் பயன்படுத்துதல், இரும்பு ஆயுதங்கள் செய்தல், பொன், வெள்ளி ஆகியவற்றைக் கொண்டு அணிகலன்கள் உருவாக்குதல், மருத்துவம் ஆகிய கலைகளை அறிந்துகொண்டனர். தமிழரைப் போல பருத்தி, பட்டு ஆகிய ஆடைகளை நெசவு செய்து அணிந்தனர். சமையல் செய்வதில் தமிழரைப் போலவே தானிய வகை, மணப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். தமிழ்க் இசை, நடனம், பாவைக்கூத்து போன்ற கலைகளை தங்கள் கலைகளோடு பிணைத்துக்கொண்டனர். வெற்றிலைப் பாக்கு மாற்றி திருமணம் செய்வது போன்ற திருமண சடங்கில் வெற்றிலைப் பாக்கை ஏற்றுக்கொண்டனர். கையில் மருதாணி வைத்து அழகு பார்த்தனர். பள்ளாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை தங்கள் வயப்படுத்திக்கொண்டனர்.


இரண்டாம் கட்டமாக, 1400களில் மலாக்கா எனும் நகரம் மன்னன் பரமேசுவரனால் மலாயாவில் உருவாக்கப்பட்டது. இவருடைய அரச தலைமுறை 110 ஆண்டுகள் மலாக்காவை ஆட்சி செய்தது. தென்கிழக்கு ஆசியாவில் மலாக்கா தலைசிறந்த வணிக நகரமாக இருந்தபோது மீண்டும் வணிக நோக்கத்திற்காகத் தமிழர்கள் மலாயாவுக்கு வந்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் உள்நாட்டு பெண்களை மணந்துகொண்டு இங்கேயே தங்கிவிட்டனர்.

இவர்களின் தலைமுறை இன்று தங்களின் மொழி, இன, சமய, பண்பாட்டு அடையாளங்களைத் தொலைத்துவிட்டு இருக்கின்றனர். உள்நாட்டு மலாய் மொழியின பண்பாட்டோடு ஏற்பட்ட கலப்பின் காரணமாக இப்போது புதிய இனம்போல மாறி இருக்கின்றனர். இவர்கள் ‘மலாக்கா செட்டிகள்’ என்று இன்றைய மலேசியாவில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் தமிழர் பரம்பரையில் வந்தவர்களாக இருந்தாலும் மலேசியத் தமிழர்களிடமிருந்து தனித்தே இருக்கின்றனர். தமிழரே அல்லாதவர் போலாகிவிட்டனர்.

வரலாற்றுக் காலத்தைக் கடந்து மலாயாவை ஆங்கிலேயர் கைப்பற்றிய பிறகு பெருவாரியான எண்ணிக்கையில் தென்னிந்தியத் தமிழர்கள் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டனர். இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கும், கரும்புக் காடுகளில் பணியாற்றவும், காடுகளை அழித்து நாடாக்கவும் சஞ்சிக்கூலிகளாக வந்த தமிழர்களை ஆங்கிலேயர் பயன்படுத்தினர். (சஞ்சி – மலாய்மொழியில் Janji அதாவது ஒப்பந்தம்)

இரப்பர் தோட்டங்களில் தமிழர்கள் பட்ட இன்னல்களும் கொடுமைகளும் அவலங்களும் சொற்களால் விவரிக்க முடியாதவை. காடுகளை அழிக்கும் போது கொடிய விலங்குகளால் தக்கப்பட்டு இறந்தவர்கள், இரப்பர் காடுகளில் நஞ்சுயிரிகளால் தாக்கப்பட்டவர்கள், மலேரியா காய்ச்சல், கொடிய நோய்கள், மருத்துவ வசதியின்மை முதலிய காரணங்களால் மரணத்தை தழுவியவர்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் 12 இலக்கம்(இலட்சம்) தமிழர்கள் மலாயாவில் மாண்டுபோயிருக்கின்றனர்.

இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயரைத் தோற்கடித்து மலாயாவை சப்பானியர் கைப்பற்றியபோது தமிழர்கள் பட்ட துன்பங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. சயாம் தொடர்வண்டி திட்டத்திற்கு (சயாம் ரயில்வே) வேலை செய்ய ஆயிரக்கணக்கில் நம்மவர்கள் இரவோடு இரவாகக் கொண்டுசெல்லப் பட்டுள்ளனர். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்களா இல்லையா? என்றுகூட தெரியாமல் தவித்திருந்தனர் நம் மக்கள். இப்படி தண்டவாளம் அமைக்க சென்றவர்கள் கொத்துக் கொத்தாக மடிந்துபோய் கும்பல் கும்பலாகப் புதைக்கபட்டுள்ளனர்.

இத்தனைக்கும் இடையில் மலாயாவையும், 1957க்குப் பிறகு மலேசியாவையும் ஒரு வளமிக்க நாடாக உருவாக்குவதில் தமிழர்களி பங்கு மிகப்பெரியது என்றால் மிகையல்ல. மலேசியா விவசாய நாடாக இருந்த காலத்தில் அதனுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உறுதிணையாக இருந்த இரப்பர், செம்பனை உற்பத்தி, கரும்பு, கொக்கோ முதலான தோட்டத்துறைகளில் இரத்தம் சிந்தி தமிழ் மக்கள் உழைத்தார்கள்.



இன்றைய நிலையில் மலேசியத் தமிழர்கள்(இந்தியர்கள்) பல்வேறு நிலைகளில் முன்னேற்றம் கண்டுள்ளனர். உயரிய கல்விக் கற்றோராக, தொழிலதிபர்களாக, நிபுணர்களாக, செல்வந்தர்களாக, பெரும் கோடிசுவரர்களாக உருவாகி இருக்கின்றனர். ஏழைகளாக இந்த நாட்டில் குடியேறியவர்கள் இன்று வளமான வாழ்க்கை வாழ்கின்றனர். இவர்களுக்கு இடையில் இன்னும் நூறாண்டுகளுக்கு முன்பு மலாயா வந்து தோட்டங்களில் வாழ்ந்த அதே இக்கட்டான சூழலில் வாழ்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். பல்வேறு சமுதாயத்தில் சிக்கல்களிலும் சீர்கேடுகளிலும் மாட்டிக்கொண்டு தவிப்பவர்களும் ஏராளமாக உள்ளனர்.


எது எப்படி இருப்பினும் தமிழர்கள் இன்று நாட்டின் குடியுரிமை பெற்ற இனமாக இந்தியர்கள் என்ற முத்திரையோடு வாழ்த்து வருகின்றனர். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற உரிமைகளுக்காக இன்றளவும் போராடி போராடி தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.


இருக்கின்ற உலக நடப்பையும் மலேசிய சூழலையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கையில், அடுத்து வருகின்ற ஐம்பது ஆண்டுகளில் மலேசியத் தமிழர்கள் தங்களின் மரபியல் அடையாளங்களான மொழி, இனம், சமயம், கலை, பண்பாடு, இலக்கியம், வரலாறு, வாழ்வியல் ஆகிய அனைத்தையும் படிப்படியாக இழந்துவிட்டு புதிய மலேசிய சமுதாயமாக உருமாறி போகக்கூடிய நிலைமை வந்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.


காரணம், மேலே சொன்னதுபோல மலாக்காவில் இதே தமிழ் இனம்தான் கண்முன்னாலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறது வேறொரு தோற்றத்தில்.. வேறொரு அடையாளத்தில்..!

Thursday, May 12, 2011

Sunday, March 20, 2011

பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாறு


பரமேஸ்வரன் எனும் சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து தருவிக்கப் பட்ட தமிழ்ச் சொல்.
பரமா எனும் சொல்லும் ஈசுவரன் எனும் சொல்லும் இணைந்து பெற்றதே பரமேசுவரன் எனும் சொல் ஆகும்.
இந்துக் கடவுளான சிவனுக்கு மற்றொரு பெயர் ஈசுவரன்.

பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாறு

* 1344 - ஸ்ரீ ராணா வீரா கர்மா எனும் சிங்கப்பூர் ராஜாவுக்கு மகனாகப் பிறந்தார்.

* 1399 - தந்தையின் இறப்பிற்குப் பின் ஸ்ரீ மகாராஜா பரமேசுவரா எனும் பெயரில் சிங்கப்பூர் அரியணை ஏறினார்.

* 1401 - சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

* 1402 - மலாக்காவைத் தோற்றுவித்தார்.

* 1405 - சீனாவிற்குச் சென்று மிங் அரசரின் ஆதரவைப் பெற்றார்.

* 1409 - பாசாய் நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். சமயம் மாறினார். மலாக்கா ஒரு சுல்தான் ராஜ்யமாக மாறியது.

* 1411 - சீனாவிற்கு மறுபடியும் சென்று மிங் அரசரிடம் பாதுகாப்பை நாடினார்.

* 1414 - தன்னுடைய 69 அல்லது 70 ஆவது வயதில் காலமானார்.

மலாக்காவைக் கண்டுபிடித்தல்

ஜாவாவை ஆண்டு வந்த ஸ்ரீ விஜயா பேரரசின் செல்வாக்கு 14 ஆம் நூற்றாண்டில் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மலாய்த் தீவுக் கூட்டங்களில் இருந்த சிற்றரசர்களின் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வந்தன.

ஸ்ரீ விஜயா எனும் பேரரசு ஜாவாத் தீவின் வரலாற்றில் மங்காதப் புகழைப் பெற்ற ஒரு மாபெரும் பேரரசு. சுற்று வட்ட அரசுகள் அனைத்தும் ஸ்ரீ விஜயா பேரரசிடம் திறை செலுத்தி வந்தன.

திறை என்றால் கப்பம். ஒரு பேரரசுக்கு மற்றொரு சிற்றரசு செலுத்தும் வரியைத் தான் கப்பம் என்பார்கள். அப்படி மற்ற சிற்றரசுகளிடம் இருந்து திறைகள் வாங்கிய ஸ்ரீ விஜயா பேரரசு, 1290 ஆம் ஆண்டில் ஜாவாவில் இருந்து விரட்டப் பட்டது.

அதன் பின்னர் ஜாவாவில் சிங்கசாரி எனும் ஒரு புதிய அரசு உருவானது. அடுத்து ஸ்ரீ விஜயா பேரரசின் செல்வாக்கும் சன்னம் சன்னமாகக் குறையத் தொடங்கியது. தொடர்ந்து சிங்கசாரி வலிமை வாய்ந்த பெரும் அரசாகவும் மாறியது.

ஸ்ரீ விஜயா பேரரசு

இந்த சிங்கசாரி அரசு, மஜாபாகிட் பேரரசின் வழித் தோன்றல் ஆகும். மலாயு எனும் இடத்தில் ஸ்ரீ விஜயா பேரரசின் அரண்மனை இருந்தது.


அந்த அரண்மனையைச் சிங்கசாரி அரசு தாக்கிய சம்பவங்கள் நிறைய உள்ளன. மலாயு எனும் இடம் இப்போது ஜாம்பி என்று அழைக்கப் படுகின்றது. பின்னர் ஸ்ரீ விஜயா பேரரசு தன்னுடைய தலைநகரத்தைப் பலேம்பாங்கில் இருந்து மலாயுவிற்கு மாற்றியது.

இருப்பினும் பலேம்பாங் முக்கியமான அரச நகராகவே விளங்கி வந்தது. 14 ஆம் நூற்றாண்டில் பலேம்பாங் அரச நகரமும் மஜாபாகிட் பேரரசின் கரங்களில் வீழ்ந்தது. அத்துடன் மாபெரும் ஸ்ரீ விஜயா பேரரசின் 1000 ஆண்டுகள் ஆளுமைக்கு ஒரு முற்றுப் புள்ளியும் வைக்கப் பட்டது. ஒரு சகாப்தம் வீழ்ந்தது.

பலேம்பாங் தோற்கடிக்கப் பின்னர் ஸ்ரீ விஜயா அரசக் குடும்பத்தினர் பிந்தான் தீவில் அடைக்கலம் அடைந்தனர். அத்துடன் ஸ்ரீ விஜயா அரச குடும்பத்தினருடன் பல ஆயிரம் மக்களும் அந்தத் தீவில் தஞ்சம் அடைந்தனர்.


அடுத்தக் கட்டமாக பிந்தான் தீவில் தற்காலிகமாக ஸ்ரீ விஜயா ஓர் அரசாட்சியை உருவாக்கிக் கொண்டது. அதற்கு சாங் நீல உத்தமன் என்பவர் அரசர் ஆனார். இந்தக் காலக் கட்டத்தில் துமாசிக் எனும் சிங்கப்பூரைத் தெமாகி எனும் ஒரு சிற்றரசர் ஆண்டு வந்தார்.


சாங் நீல உத்தமன்

தெமாகியைச் சியாம் நாட்டு அரசு ஒரு சிற்றரசராக ஏற்கனவே நியமனம் செய்து வைத்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 1324ல் பிந்தான் தீவில் இருந்து வந்த சாங் நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார்.

இதனால் சாங் நீல உத்தமன் சியாம் அரசின் கோபத்திற்கும் உள்ளானார். பின்னர் சிங்கப்பூர் ஓர் ஊர் உருவாக்கப் பட்டது. ஓர் ஊர் தான். நகரம் அல்ல. அதை உருவாக்கியவர் சாங் நீல உத்தமன். அடுத்து வந்த 48 ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது. வளர்ச்சியும் பெற்றது.

1366ல் சீனாவில் இருந்து ஒரு சீனத் தூதர் சிங்கப்பூருக்கு வந்தார். அவர் சீன அரசரின் பிரதிநிதியாகும். அவர் சாங் நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டார். சாங் நீல உத்தமனுக்கு Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana எனும் சிறப்புப் பெயரும் வழங்கப் பட்டது.

சாங் நீல உத்தமனுக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ பராக்கிரம வீர ராஜா என்பவர் சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவர் 1372 லிருந்து 1386 வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

அந்தச் சமயத்தில் சிங்கப்பூரின் உள் ஆட்சியில் சில திருப்பங்கள் ஏற்பட்டன. குடும்பச் சச்சரவுகள் தான். அதனால் சாங் நீல உத்தமனின் பேரனாகிய ஸ்ரீ ராணா வீரா கர்மா என்பவர் சிங்கப்பூரின் ஆட்சிப் பதவி ஏற்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.



பரமேஸ்வராவின் வரலாற்றுப் பயணம்

இவர் சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்தக் காலக் கட்டத்தில் சுமத்திராவில் இருந்த மஜாபாகித் அரசு திடீரென்று சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தியது.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட சிங்கப்பூர் அரசு ஏற்கனவே மஜாபாகித்தின் மீது சில தாக்குதல்களையும் நடத்தியுள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்தத் தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் படலமாக இந்த மஜாபாகித் அரசின் திடீர் தாக்குதலும் அமைந்தது.

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் சாங் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். இவர் மஜாபாகித்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க நினைத்தார். அதனால் சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார்.

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்தார். மலேசியாவின் பழைய பெயர் மலாயா. மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது மூவார் எனும் இடத்தை அடைந்தார்.

மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் (அழுகிப் போன உடும்பு) எனும் ஓர் இடம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் எனும் மற்றோர் இடமும் இருக்கிறது. இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார்.

நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசு அமைக்க பொருத்தமாகவும் அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.

அப்படி போய்க் கொண்டிருக்கும் போது செனிங் ஊஜோங் எனும் இடத்தை அடைந்தார். இந்த செனிங் ஊஜோங் இப்போது சுங்கை ஊஜோங் என்று அழைக்கப் படுகிறது.

இந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு இப்போது மலாக்கா ஆறு என்று அழைக்கப் படுகின்றது.

அந்த மீன்பிடி கிராமம் தான் இப்போதைய மலாக்கா மாநகரம் உருவான இடம். இந்த இடத்தில் தான் ஒரு சருகுமான் ஒரு நாயை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது. நாய் மல்லாக்காக விழுததாலும் பரமேஸ்வரா சாய்ந்து ஓய்வு எடுத்த மரத்தின் பெயர் மலாக்கா எனும் பெயர் கொண்டதாலும் அந்த இடத்திற்கு மலாக்கா என்று பெயர் வந்தது.


பரமேஸ்வராவின் திருமணம்

இந்தக் காலக் கட்டத்தில் வட சுமத்திராவில் பாசாய் எனும் ஓர் சிற்றரசு இருந்தது. இது கடல் கரையோரமாக இருந்தச் சிற்றரசு.

சுமத்திரா எனும் சொல் சமுத்திரம் எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது. இந்தப் பாசாய் சிற்றரசின் இளவரசியைப் பரமேஸ்வரா 1409 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு அவர் இஸ்லாமிய சமயத்தில் இணைந்தார். தன் பெயரை இஸ்கந்தார் ஷா என்றும் மாற்றிக் கொண்டார். ஷா என்பது ஓர் அரசரைக் குறிக்கும் பாரசீகச் சொல்.

மலாக்கா சுல்தான்கள் ஆட்சி காலம்

பரமேஸ்வரா எனும் இஸ்கந்தார் ஷா 1400–1414


சுல்தான் மேகாட் இஸ்கந்தார் ஷா 1414–1424

சுல்தான் முகமது ஷா 1424–1444

சுல்தான் அபு ஷாகித் 1444–1446

சுல்தான் முஷபர் ஷா 1446–1459

சுல்தான் மன்சூர் ஷா 1459–1477

சுல்தான் அலாவுடின் ரியாட் ஷா 1477–1488

சுல்தான் முகமது ஷா 1488–1528

சமய மாற்றம்

பரமேஸ்வராவின் சமய மாற்றம் தெளிவற்ற நிலையில் இன்னும் இருந்து வருகிறது. அவர் சமய மாற்றம் செய்து கொண்டார் என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

சீனாவில் கிடைத்த காலக் கணிப்புக் குறிப்புகளின் படி பரமேஸ்வராவின் மகன் 1414ல் சீனாவிற்கு விஜயம் செய்து இருக்கிறார். தன்னுடைய தந்தையார் பரமேஸ்வரா இறந்து விட்டதாகச் சொல்லியும் இருக்கிறார்.

சீனாவின் மிங் பேரரசர் பரமேஸ்வராவின் மகனை மலாக்காவின் இரண்டாவது ஆளுநராக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளார். அந்தப் பரமேஸ்வராவின் மகன்தான் ஸ்ரீ ராம விக்ரமா என்று பின்னர் அழைக்கப் பட்டார்.


அவரை பரமேஸ்வர ராஜா என்று மலாக்காவில் அழைக்கப் பட்டும் இருக்கிறார். அவருடைய குடி மக்கள் அவரை சுல்தான் ஸ்ரீ இஸ்கந்தர் சுல்கார்னாயின் ஷா என்றும் சுல்தான் மேகாட் இஸ்கந்தர் ஷா என்றும் அழைத்து உள்ளனர். இவர் மலாக்காவை 1414 லிருந்து 1424 வரை ஆட்சி செய்து உள்ளார்.


பரமேஸ்வரா இறப்பு

1414 ஆம் ஆண்டு பரமேஸ்வரா தன்னுடைய 70 ஆவது வயதில் காலமானார். அவருடய உடல் போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் எனும் இடத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் அல்லது சிங்கப்பூரில் உள்ள கென்னிங் கோட்டையில் புதைக்கப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இதுவும் இன்னும் உறுதி படுத்தப் பட வில்லை. அதைப் பற்றி ஆய்வுகள் செய்து கொண்டு இருக்கிறேன்.

கென்னிங் கோட்டைக்கு அருகில் ஓர் இஸ்லாமிய இடுகாடு இன்னும் இருக்கிறது. பரமேஸ்வராவுக்குப் பின் அவருடைய மகன் மேகாட் இஸ்கந்தர் ஷா மலாக்காவை 1424 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் மலாக்காவின் மூன்றாவது ஆட்சியாளர் ராஜா தெங்ஙா என்பவர். இவரை ராடின் தெங்ஙா என்றும் அழைத்தனர். இவருக்கு ஸ்ரீ மகாராஜா எனும் விருது வழங்கப் பட்டது.

இவர் இஸ்லாமிய சமயத்தைத் தழுவி முகமது ஷா எனும் விருதைப் பெற்றார். இவர் இந்திய முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்டதால் பெயர் மாற்றம் கண்டிருக்கலாம் என்று கல்வியாளகள் நம்புகின்றனர்.

அவர் இறந்த பிறகு அவருடைய மகனான ரோக்கான் இளவரசர் ராஜா இப்ராகிம் அரியணை ஏறினார்.

சமூகச் சச்சரவுகள்

ராஜா இப்ராகிம் ஆட்சி காலத்தில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது. மலாக்காவில் வாழ்ந்த இந்திய முஸ்லீம் சமூகத்தினருக்கும் பாரம்பரிய இந்து மலாய்க்காரர்களுக்கும் இடையே சச்சரவு உண்டாகியது.

ராஜா இப்ராகிமிற்கு இஸ்லாமியப் பெயர் இருந்தும் அவர் புதிய சமயத்தைத் தழுவவில்லை என்பது ஒரு பெரும் குறைகூறல். அவர் ஸ்ரீ பரமேஸ்வரா தேவா ஷா பெயரில் ஆட்சி செய்தார் என்பது மற்றொரு குறைகூறல்.

அந்தச் சச்சரவுகளினால் அவரால் நல்ல முறையில் ஆட்சி செய்ய முடியவில்லை. அதனால் பதினேழு மாதங்கள் தான் ஆட்சி செய்ய முடிந்தது. பாவம் அவர். 1446ல் அவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டார். அதன் பின்னர் ராஜா இப்ராகிமின் ஒன்று விட்டச் சகோதரர் ராஜா காசிம் பதவிக்கு வந்தார்.


ராஜா காசிமின் தாயார் ஒரு தமிழ் முஸ்லிம் ஆவார். ராஜா காசிமின் பெயர் சுல்தான் முசபர் ஷா என்று மாற்றம் கண்டது. மலாக்கா சுல்தான்களின் ஆட்சியில் புதிய சகாப்தம் மலர்ந்தது. இந்தக் கட்டத்தில் இந்துக்களும் இந்து சமயமும் அதிகாரம் இல்லாமல் போயினர்.


பரமேஸ்வராவுக்குப் பின்

பரமேஸ்வரா எனும் ஒரு சாதாரண மனிதன் பகைவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்தான். எங்கே போவது என்று தெரியாமல் புகலிடம் தேடி அலைந்தான்.

வலிமையற்றது வலிமையானதைத் தோல்வி அடையச் செய்ய முடியும் என்பதைக் கண்டு அறிந்தான். அதையே ஒரு நல்ல சகுனமானக் கருதி ஓர் இருப்பிடத்தை உருவாக்கினான்.

அந்தச் சாதாரண இருப்பிடமே பின் நாளில் ஆசிய வரலாற்றில் மகத்துவம் வாய்ந்த தனிப் பெரும் வரலாறாக மாறியது. செல்வாக்கு மிக்க சக்தியாகவும் மாறியது.

மலாக்காப் பேரரசு தென்கிழக்கு ஆசியத் தீவுக் கூட்டத்தின் தலைவிதியையே மாற்றியும் அமைத்தது. உலக மன்னர்கள் வியந்து மனப்பூர்வமாகப் பாராட்டினார்கள். அண்டை நாட்டு மன்னர்கள் ஆழ்ந்த மரியாதை கொடுத்தனர்.


மலாக்காவின் செல்வாக்கு அதிகாரமும் ஆதிக்க நிலைப்பாடும் தென்கிழக்கு ஆசியத் தீவுக் கூட்டத்தில் இஸ்லாமிய சமயம் பரவுவதற்குச் சாதகமாக அமைந்தன.

1447ல் கர்த்தா விஜயா என்பவர் மஜாபாகித்தின் அரசரானார். இந்தோசீனாவில் இருந்த சம்பா நாட்டின் இளவரசியான தாராவதியை மணந்தார்.

மனைவியின் அறிவுரையின் படி இஸ்லாமியச் சமயத்தில் இணைந்தார். கர்த்தா விஜயாவின் சகோதரர்களில் ஒருவரான சுனான் அம்பேல் என்பவர் ஜாவா சுராபாயாவில் இஸ்லாமியச் சமயம் பரவுவதற்கு மிகுந்த முயற்சிகளை எடுத்துக் கொண்டார்.

அந்தக் காலக் கட்டத்தில் பலேம்பாங் இஸ்லாத்திற்கு மாறியது. 1459ல் சுல்தான் மன்சூர் ஷா கெடா, பகாங் மீது தாக்குதல்கள் நடத்தினார். வெற்றியும் பெற்றார். பகாங் நிலப் பகுதி மலாக்காவின் ஆளுமையின் கீழ் வந்தது.

இந்தச் சமயத்தில் வேறு ஒரு நிகழ்ச்சியும் நடந்தது. 1470ல் சம்பாவில் ஏற்பட்ட படுகொலைகளில் இருந்து தப்பித்த 60,000 பேர் மலாக்காவில் தஞ்சம் அடைந்தனர்.


பரமேஸ்வராவின் வாணிக மையங்கள்

1400ஆம் ஆண்டுகளில் மலாக்கா பரமேஸ்வராவின் ஆட்சி காலத்தில் மலாக்கா மிகவும் புகழ் பெற்ற வாணிகத் துறைமுகமாக விளங்கியது. அங்கே 80 மொழிகள் பேசப் பட்டன என்பது எல்லாம் வரலாற்றுச் சான்றுகள்.

உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர். அந்த இடங்களின் விவரம் வருமாறு:

தமிழ் நாடு, கெய்ரோ, ஏடன், ஓர்முஸ். ரோமாபுரு, துருக்கி, குஜாராத், கோவா. மலாபார், ஓரிசா, ஸ்ரீ லங்கா. வங்காளம், சியாம், கெடா, பகாங்,

பட்டானி, கம்போடியா, சம்பா, கொச்சின், புருணை, லிங்கா, மினாங்கபாவ், பாசாய், மாலைத் தீவுகள்.

16 ஆம் நூற்றாண்டில் கீழைத் தேச நாடுகளில் மலாக்கா மிகவும் முக்கியமான துறைமுகமாக விளங்கியது.
அதன் செல்வ வளப்பத்தைக் கண்டு தோம் பைரஸ் (Tom Pires) என்பவர் “யார் ஒருவர் மலாக்காவின் பிரபுவாக இருக்கின்றாரோ அவர் வெனிஸ் நகரின் கழுத்தின் மீது கை வைத்தது போல் ஆகும்” என்று சொன்னார்.
தோம் பைரஸ் ஒரு போர்த்துகீசிய வணிகர், எழுத்தாளர் ஆகும்.

Sunday, February 20, 2011

நினைவுகளை சுமக்கும் கைதியாய் உன்னுடன் நான் !

நனைய மறந்த மழைத்துளி ..
கோர்க்க முடியாத பனித்துளி ..
சேர்க்க முடியாத மழலை சிரிப்பு .
பார்க்க முடியாத மொட்டவிழும் பொழுது..
கைக்குள் அகப்படாத தென்றல் காற்று ..
...எல்லாவற்றிற்கும் மேலாக
வெல்ல முடியாத உன் இதயம் ..
எப்போதும் வெற்றிடமாய் நான்..

கவிதைகள் கிறுக்கி கறை படிந்த பொழுதும் .
உன் பார்வை பட்ட மறுநோடி .
மீண்டும் வெற்றுக் காகிதமாய் என் இதயம் .!
மீண்டும் , மீண்டும் கிறுக்குக்கின்றேன் .
என்றாவது உன் இதயத்தில்
என் நினைவுகள் நிரப்பபபடலாம் என்ற
ஏதோ ஒரு நம்பிக்கையில் அதுவரை
நினைவுகளை சுமக்கும்
கைதியாய் உன்னுடன் நான் !