Tuesday, July 28, 2009

900 ஆண்டு பழமை வாய்ந்த சிவாலயத்தில் முஸ்லிம் குருக்கள்


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாகல்காம் மாவட்டத்தில் லிட்டர் ஆற்றின் கரையில் அமைந்துள்ள 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலுக்கு அதன் பழமையைக் காட்டிலும் மற்றுமொரு சிறப்பும் உள்ளது.

இந்தக் கோயிலில் சிவனுக்கு நாள்தோறும் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் அளித்து வரும் அதே ஊரைச் சேர்ந்நத இரண்டு இஸ்லாமியர்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாநிலமாகும். இதன் காரமாகவே இங்குள்ள பிரிவினைவாத சக்திகள் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் இங்குள்ள காஷ்மீரி பண்டிட்களும் உயிருக்கு பயந்து ஜம்முவில் அகதிகளாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இங்குள்ள மாமலாகா கோயிலில் முகம்மது அப்துல்லா மற்றும் குலாம் ஹசன் ஆகிய இரண்டு இஸ்லாமியர்கள் தற்போது கோயில் குருக்களாக இருந்து நாள்தோறும் பூiஜ செய்து வருகின்றனர்.

கோயிலைத் திறப்பது, மணி அடிப்பது மட்டுமல்ல, நாங்கள் சிவனுக்கு பூஜையும் செய்கிறோம் என்கிறார் குலாம் ஹசன். இக்கோயிலில் உள்ள 3 அடி உயர சிவலிங்கத்திற்கு பாதுகாப்பு அளிப்பதுடன், இங்கு வரும் பக்தர்கள் பிரசாதம் பெற்றுச் செல்வதையும் அவர்கள் இருவரும் உறுதி செய்கின்றனர்.

ராஜா ஜெய சூர்யா என்பவரால் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் தவறாமல் சென்று வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

கடந்த 1989ம் ஆண்டு இக்கோயிலில் வழிபாடுகள் நடத்தி வந்த பண்டிட்கள் அங்கிருந்து அகதிகளாக சென்று விட்ட பிறகு இந்தக் கோயில் மாநில அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறைவசம் சென்று விட்டது.

ஊரைவிட்டுச் செல்லும் போது கோயிலில் வழிபாடு செய்து வந்த பண்டிட், இந்தக் கோயிலை நாள்தோறும் திறந்து வைத்திருக்குமாறு தனது நண்பர் அப்தல் பட் என்ற இஸ்லாமியரை கேட்டுக் கொண்டார். கடந்த 2004ம் ஆண்டு அங்கிருந்து மாறிச் செல்லும் வரை அந்தப் பொறுப்பை தவறாமல் நிறைவேற்றி வந்த பட், பின்னர் அந்தப் பொறுப்பை முகம்மது அப்துல்லா மற்றும் குலாம் ஹசனிடம் அளிக்க அவர்களும் இன்றுவரை அதை செயல்படுத்தி வருகின்றனர்.

பயங்கரவாதிகளிடம் இருந்து வந்த அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் இந்தப் பணியை சிரமேற்கொண்டு செயல்படுத்தி வரும் அவர்கள் இருவரும், சிவபெருமான் மீது தங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தனர்.

பிரிவினை குரல் ஓங்கி ஒலிக்கும் மாநிலத்திலிருந்து மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக திகழும் இந்த இரு இஸ்லாமிய சகோதரர்களும் போற்றத்தக்கவர்கள்

1 comment:

  1. தமிழில் மற்றுமொரு வலைப்பதிவை காண்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். தொடரட்டும் உங்கள் முயற்சி!

    பின் குறிப்பு : சில பதிவுகளில் படங்கள் பதிவேற்றப்படவில்லையே?

    ReplyDelete