Wednesday, May 5, 2010

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்


எனது துணிவுடைய இளஞர்காள் நீங்கள் அனைவரும், பெருங் காரியங்களைச் செய்ய பிறந்தவர்கள், என்ற நம்பிக்கை கொள்ளுங்கள். குட்டி நாய்களின் குரைத்தலைக் கண்டு அஞ்சாதீர்கள்!

உமது நாடு வீரர்களை வேண்டி நிந்கின்றது. வீரராகுக. ஒரு கற்பாறையைப்போல் உறுதியாக நிற்பீராக. மெய் எப்பொழுதும் வெல்கிறது.

நண்ப, அழுவதேன்? உமக்குள் எல்லாச் சக்தியும் உள்ளது. பலவானே உனது எல்லாம் வல்ல இயல்பை வரவழை. மூவுலகமும் உன் காலடியில் அமரும். வெல்வது ஆன்மா ஒன்றே. சடமன்று.

பலமே வாழ்வு, பலமின்மையே மரணம். பலமே இன்பமும் நிலையான அழிவற்ற வாழ்வுமாம்.

நமது பலமின்மையே நம்மிடம் பொய்யும், களவும், கொலையும், வேறு பல பாவச்செயல்களும் இருப்பதற்கு காரணமாம்.

நமக்கு வேண்டிய ஒரே பொருள் பலமே. உலகத்தின் நோய்க்கு மருந்தும் பலமே.

எழுந்து நில்லுங்கள். பலமுடையவராகுங்கள், தைரியமாயிருங்கள். வாழ்க்கையை உங்கள் பிரியப்படி அமைத்துக் கொள்ளுங்கள்.

எல்லா விலங்குகளிலும், எல்லாத் தேவ தூதர்களிலும் பார்க்க மனிதனே உயர்ந்தவன்.

நாம் போதிய நெடுங்காலம் அழுதாயிற்று. இனியும் அழ வேண்டாம். எழுந்து நின்று ஆண்மையுடன் போராடுங்கள்.

நாம் பல பொருள்களைப்பற்றிக் கிளியைப்போல் பேசுகின்றோம். ஆனால் செயலளவிலில்லை. இதன் காரணம் யாது? உடற்பலவீனம். இவ்விதப் பலமற்ற மூளையால் ஒன்றையும் செய்யவியலாது.

நீதியாயிரு, தைரியமாயிரு, முழுமனதும் ஊன்றியவனாயிரு, பிறலாத ஒழுக்கமுடையவனாயிரு!

அறிவுக்குத் தொந்தரவு கொடாதெ, கோழைகளே பாவம் புரிவர். தைரியசாலிகள், பாவம் புரியார், ஒவ்வொருவரையும் நேசிக்க முயல்க.
வஞ்சனையால் பெரும்பணி எதனையும் ஆற்ற முடியாது அன்பாலும், சத்தியத்தாலும், பெரும் சக்தியாலுமே பெருங்காரியங்கள் நிறைவேறுகின்றன.

ஆ! நீங்கள் உங்களது இயல்பை மட்டும் உணர்வீரேல் நீங்கள் ஆத்மாக்களே, தெய்வங்களே!

நான் மெய்யைப் பின்பற்றி நிற்பவன், மெய் ஒருக்காலும் பொய்யோடு ஒன்று சேராது, சத்தியமே வெல்லும்!

இவ்வுலகம் கோழைகட்கன்று. ஓட முடியாத வெற்றியையோ, தோல்வியையோ கோராதே!

பழிவாங்குதலைப்பற்றி ஒருக்காலும் நான் யோசிப்பதில்லை, பேசியதுமில்லை. எப்பொழுதும் பலத்தைப்பற்றியே பேசியுள்ளேன்.

எழுந்திருங்கள், உழையுங்கள், இவ்வாழ்வு எத்தனை நாள்? இவ்வுலகில் தோன்றிய நீங்கள் ஏதாகிலும் விட்டுச் செல்லுங்கள். அப்படிச் செய்யாவிடில் மிருகங்களுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

கடலைப்பார். அலையைப்பாராதே. எறும்பிற்கும் தேவ தூதனுக்கும், எவ்வித வேற்றுமையையும் பாராதே. ஒவ்வொரு புழுவும் இயேசுவின் சகோதரனாகும்.

சிவ பெருமானுக்குப் பணி செய்ய விரும்புவோன், அப்பெருமானின் மக்கட்குப் பணி செய்ய வேண்டும்!

நம் வாழ்நாட்களில் பெரும் பாகம் துக்கம் நிறைந்ததாகும். என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த விடயம். அதைத்தடுக்க எப்படி முயன்றாலும், அது வந்தே தீரும் என்பதையும் நன்கு அறிவோம்.

No comments:

Post a Comment