Thursday, December 3, 2009

தமிழ் காப்பான் நண்பன்; துணை நிற்கட்டும் தமிழன்

மலேசியக் கல்விச் சான்றிதழ் எனும் எசுபிஎம் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற கல்வியமைச்சின் அறிவிப்பினால் தமிழ்மொழிக்கும் தமிழ் இலக்கியப் பாடத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருகிறது.

நீண்ட காலத்தில் தமிழ்மொழிக்கும் தமிழ்க்கல்விக்கும் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதால் தமிழ்சார்ந்த அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் ஓங்கி குரலெழுப்பி வருகின்றன; கடும் கண்டனத்தைப் புலப்படுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், மலேசியவின் நாளிதழ்கள் மூன்றும் இதற்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவர்களுக்குத் நன்றிகூற மலேசிய இந்தியர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.

தமிழை மீட்டெடுப்பதில் தமிழ் செய்தித்தாள்களுக்கு முக்கியப் பொறுப்பு இருப்பதைப் பற்றி நேற்று ஒரு பதிவிட்டிருந்தேன். இதுவும் அது தொடர்பான பதிவுதான். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ‘மலேசிய நண்பன்’ நாளேடு பற்றிய செய்தி இது.

‘மலேசிய நண்பன்’ நாளேடு தொடர்ந்தாற்போல ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த மொழிப்போராட்டச் செய்திகளை விரிவாக வெளியிட்டு வருகின்றது. அதுவும் ஒவ்வொரு நாளும் முதற்பக்க செய்தியாகப் போடுகிறது.

தொடர்ந்து ஒரே செய்தியைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டால், வாசகர்கள் வெறுப்படைவார்கள் என்ற வணிக நியதியை புறந்தள்ளிவிட்டு, தமிழ்ச் சமுதாயத்தின் நலன் கருதி, இந்தச் சிக்கல் பற்றி செய்திகள் போட்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு நண்பன் நாளேடு முழுமூச்சுடன் எடுத்துக்கொண்டிருக்கும் முனைப்பு பாராட்டுக்கு உரியது.

தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியப் பாடத்தையும் மீட்கும் தன்னுடைய முயற்சியின் மேலும் ஒரு நடவடிக்கையாக இன்று 2.12.2009 ‘பிரதமருக்கு இந்தியர்கள் கோரிகை’ என்ற படிவத்தை வெளியிட்டிருக்கிறது நண்பன் நாளேடு.

மலேசியப் பிரதமர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்களின் பார்வைக்கு இந்தச் சிக்கலைக் கொண்டு சென்று நல்லதொரு தீர்வைக் காணும் நோக்கத்தில் இந்தப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

எசுபிஎம் தேர்வில் தமிழ், தமிழ் இலக்கியம் ஆகிய இரண்டு பாடங்களையும் எடுப்பதற்குரிய வகையில் அந்தப் பாட எண்ணிக்கையை 10லிருந்து 12ஆக அதிகரித்து உதவுமாறு பிரதமரையும், கல்வியமைச்சராகிய துணைப்பிரதமரையும் கேட்டுக்கொள்கிறது இந்தக் கோரிக்கைப் படிவம்.

மேலும், பிரதமர் வகுத்துள்ள ‘ஒரே மலேசியா’ கோட்பாட்டின் கீழ் அனைவரின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற கருத்தையும் இது மேற்கோள் காட்டியுள்ளது.

இதில், பெயர், முகவரி. அடையாள அட்டை எண் முதலான விவரங்களை எழுதி மலேசிய நண்பன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இன்றுதொடங்கி இன்னும் 10 நாட்களுக்கு இந்தப் படிவம் மலேசிய நண்பனில் வெளிவரும்.

ஆகவே, மலேசிய நண்பன் வாசகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மலேசியத் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக இந்தக் கோரிகைப் படிவத்தை நிறைவு செய்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் நமது தாய்மொழியாம் தமிழை இந்த நெருக்கடியிலிருந்து மீட்க வேண்டும்; தமிழ் இலக்கியத்தை காக்க வேண்டும்.

முக்கிய அறிவிப்பு:- இது மலேசிய நண்பனுக்காகச் செய்யப்படும் விளம்பரம் அல்ல. மலேசியாவில் தமிழ்மொழியின் வாழ்வுரிமைக்காக முன்வைக்கப்படும் வேண்டுகை.

No comments:

Post a Comment